உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

குதிரைப் பேரம் ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இரகசியப் பேச்சுகள், குதிரைப் பேரம் ஆரம்பமாகியுள்ளன என்று அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர் என்றும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் மஹிந்த அணி பக்கம் தாவவுள்ளனர் என்றும் என்றும் தெரியவருகின்றது.

அதேபோல் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையவுள்ளனர் என்பதுடன் ஐ.தே.கவைவிட்டு வெளியியேறி உறுப்பினர்கள் சிலர் மீண்டும் தாய்வீடு திரும்பவுள்ளனர்.

இந்நிலையில் கட்சி தாவும் படலத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன இன்று பிள்ளையார் சுழி போட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராக செயற்பட்ட எஸ்.பி. நாவின்ன 2015 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மைத்திரியுடன் சங்கமித்தார். அதன்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்தார்.

ஒக்டோபர் ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சியின் பின்னர் மீண்டும் மஹிந்த பக்கம் ஓடினார். இதனால், அண்மையில் அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தும் முடிவை ஐக்கிய தேசியக்கட்சி எடுத்திருந்தது.

எனினும், சஜித்துக்கு ஆதரவு வழங்குவதற்காக மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் வந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க