உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

11வது மணித்தியாலத்தில் தப்பிய இலங்கை தமிழ் குடும்பம்

அவுஸ்திரேலியா மெல்பேர்னில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கை 11ஆவது மணித்தியாலத்தில் இன்று தடுக்கப்பட்டுள்ளது

இதைத் தொடர்ந்து அவர்கள் டார்வினில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களும் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த குடும்பம் பலரது எதிர்ப்பையும் மீறி விமானத்தில் ஏற்றப்பட்டது

எனினும் விமானம் டார்வினைச் சென்றடைந்த போது இக்குடும்பம் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக ஒரு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்ப நண்பர் தெரிவித்தார்.

பிரியா நடேசலிங்கம் குடும்பத்தின் நாடுகடத்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு ஒன்றின் அடிப்படையில் இறுதி 11ஆவது மணித்தியாலத்தில் நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடையை அடுத்து இது சாத்தியமாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு தருணிக்கா உட்பட அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை ஈடுபட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்து பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம் நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று மெல்பேர்ன் பெடரல் உசைஉரவை நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது.

ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இறுதி முயற்சியாக குழந்தை தருணிக்கா தன்னை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை அமைச்சரிடம் அனுப்பி வைக்க மறுத்து விட்டனர்.

இது இவ்வாறிருக்க நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்துவந்த பிலோலே பகுதி மக்கள் இக்குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததுடன் பேரணி கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்ட போதும் இக்குடும்பத்திற்கு கருணைகாட்ட முடியாது என உள்துறை அமைச்சர் தொடர்ந்தும் மறுத்துவந்தார்

இந்தநிலையில் இந்நாடுகடத்தல் முயற்சி மற்றுமொரு தடவை தடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க