சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கான செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டம் மற்றும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் என்பவற்றுடன் இணைந்து 1.06 பில்லியன் ரூபா பெறுமதியான நிதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
‘இலங்கை இவ்வருடம் ஓர் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் நாட்டில் நிலவும் வறுமை தொடர்பில் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் வளமைபோன்றே அக்கறையுடன் செயற்படுகின்றது’ என அந்நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் நாயகம் கான்க் யொன் ஹுவா தெரிவித்தார்.
எத்தகைய காலநிலை மாற்றங்களுக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய வதிவிட நிர்மாணம் மற்றும் தேவையான அபிவிருத்தி என்பவற்றை எமது முதலீட்டின் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் இதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வருடத்தில் வரட்சியினாலும், கடந்த 3 வருடகாலத்தில் சூறாவளியினாலும் ஏற்பட்ட தாக்கங்கள் வறிய விவசாயக் குடும்பங்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் புலப்படுத்துகின்றன என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் பிரெண்டா பார்டன் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க