உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அமல நாயகி மீது தாக்குதல்

வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் துணைத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவருமான அமல நாயகி என்பவர் மீதும் அவரது மகள் மீதும் இனந்தெரியாத நபர்கள் இன்று மாலை உந்துருளியால் மோதியுள்ளனர்.

இதனால் காயமடைந்த அமல நாயகி மற்றும் அவரது மகள் ஆகியோர் மட்டக்களப்பு கரடியனாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரண வீடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக உந்துருளியில் தனது மகளுடன் மட்டக்களப்பு உன்னிச்சை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயம் எதிர்த்திசையில் வருகை வந்த மூன்று பேர் அடங்கிய குழுவினரால் வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது

தாம் எதிர் திசையில் வருவதை அறிந்து வேண்டுமென்றே தனது உந்துருளியை நோக்கி எதிரே வந்தவர்கள் செலுத்தியதாகவும் அதன்போது விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டதாகவும் இருவரும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு மோதிவிட்டு தப்பிச் சென்றவர்களை பிரதேச இளைஞர்கள் மடக்கிப்பிடித்த சமயத்தில் ஏனைய இருவரும் தப்பிச் செல்ல ஒருவர் பிடிபட்டு மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறு காயமடைந்த அமல நாயகி வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருப்பதுடன் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கே போராட்டங்களை ஒழுங்கமைத்து வருகின்றார்

இந்த நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகிய நிலையில் இன்றைய தினம் வேண்டுமென்றே உந்துருளியால் மோதி தாக்குதல் மேற்கொண்டுள்ள மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஒருவகையிலான அச்சுறுத்தல் செயற்பாடு என அமலநாயகி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க