உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு- மண்முனையில் காணியை விடுவிக்க வேண்டும்- இரா.துரைரெட்ணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்ணளவாக 1750 ஏக்கர் காணி மத்திய அரசாங்கத்தின் வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சின் கீழ் 2017 ஆம் ஆண்டு யூன் மாதம் 05 ஆம் திகதி (திங்கட்கிழமை) வர்த்தமானி மூலம் கொணடு வரப்பட்டுள்ளது.

இதனை இரத்துச் செய்யுமாறு கூறி, ஜனாதிபதி, பிரதமர், வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டார்,

பன்சேனை-148டீ கிராமசேவையாளர் பிரிவிலுள்ள பன்சேனைக் கிராமத்தில் இரும்பன்ட குளத்துக்கு அருகிலும், பொக்கட்டர்குளப்பகுதி, மகிழையடி ஓடைப் பகுதியையும் உள்ளடக்கிய 548அரை ஏக்கர் காணியும், இதே பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமம் உட்பட அடைச்சகல்குளம், கண்டியனாறு இரு குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள 726 கால்ஏக்கர் காணியும், இத்தோடு ஆயிலியடிச் சேனை, அழகிப்போடியார் குளத்தையும் உள்ளடக்கிய பகுதியோடு, காந்திநகர் கிராமசேவையாளர் பிரிவிலுள்ள வெள்ளைக்கல் தளவாய் பகுதியையும் சேர்த்து 507 கால் ஏக்கர் காணிகளுமாக 1750 ஏக்கர் விவசாயக் காணியை கையகப்படுத்தும் வகையில் வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காணிகளைப் பொறுத்தவரையில் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் இப்பகுதியில் பல குடும்பங்கள் நிரந்தரமாக குடியிருந்து மேட்டுநிலப் பயிர்செய்கை, வேளாண்மைச் செய்கை, ஏனைய இயற்கையோடு ஒத்த தொழில்களைச் செய்தது மட்டுமல்லாமல் கால்நடை, மீன்பிடி தொழில்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மக்களைப் பொறுத்தவரையில் யுத்தம் காரணமாக பல தடவைகள் இடம் பெயர்ந்து வருடாவருடம் நீர் உள்ள காலத்தில் தொழில் செய்து வருவது வழக்கமாகும். நிரந்தரமாக கால்நடை, மீன்பிடி, விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் உறுதி, ஒப்பம், ஒப்பத்திற்கு விண்ணப்பித்த ஆதாரங்கள், இன்னும் ஒருசிலர் சேனைப்பயிர் செய்து கொண்டும் வருகின்றனர் இத்தோடு இப்பகுதியில் நிரந்தரமாக வீட்டுத்திட்டங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக 300 இற்குமேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டு காலமாக நிரந்தரத் தொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் பிரதேசமாக உள்ளதால் மக்கள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், காணிதொடர்பான குழுக்கள் ஒருவருக்கும் தெரியாமல் இக்காணிகளை வர்த்தமானி பிரகடனப்படுத்தியது கவலைக்குரிய விடயமாகும் என்றும் இரா.துரைரெத்தினம் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.

கருத்து தெரிவிக்க