உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை பொறுப்பேற்கிறார் மஹிந்த

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை மஹிந்த ராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவார் என கூட்டு எதிரணி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்டக் கூட்டம் இன்று (21) முற்பகல் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தகவல் வெளியிடப்பட்டது எனவும் தெரியவருகின்றது.
பொதுஜன பெரமுனவின் வருடாந்த சம்மேளனத்தை ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கும் அதற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்வதற்கும் விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
இம்மாநாட்டின்போதே கட்சி தலைமைப்பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கும் யோசனையை தற்போதைய தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் முன்வைப்பார் என்றும், அதனை பஸில் ராஜபக்ச வழிமொழிவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மாநாட்டில் சிறப்புரையாற்றும்போது கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ச அறிவிப்பாரென்றும், அது பெரும்பாலும் கோட்டாபய ராஜபக்சவாகவே இருக்கும் என்றும் எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த அறிவித்த பின்னர் மறுநாள் காலை கண்டி தலதாமாளிகைக்கும், முன்னேச்சரம் கோவிலுக்கும் செல்வதற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்பின்னர் மாவட்ட ரீதியில் ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வுகளும் இடம்பெறும் என கூட்டு எதிரணி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

கருத்து தெரிவிக்க