வெளிநாட்டு செய்திகள்

கசோக்கி கொலையில், சவுதி அரேபிய இளவரசருக்கு தொடர்பு -ஐ.நா சபை

ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கொலையில், சவுதி அரேபிய இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ள ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஒக்னஸ் காலாமார்ட், சவுதி அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக கசோக்கியை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கசோக்கியின் விசாரணைகள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கசோக்கி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரிடமும் வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையான முறையில் விசாரணையில் நடைபெறவில்லை.

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் கசோக்கி கொலையில் தொடர்புள்ளது.  அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

அமெரிக்காவை சேர்ந்த ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி, கடந்த ஆண்டு, இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்துக்கு சென்றபோது, கொடூர கொலை செய்யப்பட்டார்.

இதில் சவுதி  அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சவுதி அரசு அதனை மறுத்து வந்தது. இந்நிலையிலேயே ஐ.நா சவுதி இளவரசரிடம் விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க