உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘டின்சின் தோட்ட கலாச்சார மண்டபத்திற்கு இரு பிரிவினர் அதிகார போட்டி’

நோர்வூட் பிரதேச சபையின் பிரதான காரியாலயம் தற்போது இயங்கி வரும் பொகவந்தலாவ டின்சின் நகரிற்கு அருகில் உள்ள கலாச்சார மண்டபம் தொடர்பில் இராண்டாவது நாளாகவும் மக்களின் எதிர்ப்பு இடம்பெற்றது.

டின்சின் நகரவாசிகள், சித்தி விநாயக ஆலய கமிட்டிகள் மற்றும் டின்சின் தோட்ட மக்கள் ஆகியோர் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நோர்வூட் பிரதேச சபை இயங்கி வரும் கட்டிடம் எமக்கு உரித்தான கட்டிடம் என டின்சின் நகர வாசிகள் சொந்தம் கொண்டாடும் நிலையில் 15.08.2019 அன்றைய தினம் வீதிக்கு இறங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

அதேநேரத்தில் குறித்த தோட்ட மக்கள் இது எமது தோட்டப்பகுதியில் கட்டப்பட்ட கட்டிடம் எனவும், இது எமக்கு உரித்தான கட்டிடம் எனவும், 15.08.2019 அன்று இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையினை எதிர்த்து 16.08.2019 அன்று காலை நோர்வூட் பிரதேச சபைக்கு முன்பாக டின்சின் தோட்ட மக்களும் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுப்பட்டனர்.

இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நோர்வூட் பிரதேச சபை அண்மை காலத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரதேச சபைகளில் ஒன்றாகும்.

புளியாவத்தை நகரில் குறித்த பிரதேச சபையின் கட்டிடம் வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வந்தது.

இந்த நிலையில் பொகவந்தலாவ நகரத்திற்கு அண்மையில் உள்ள டின்சின் நகரத்திற்கு அருகில் டின்சின் தோட்ட மக்களுக்காக அத் தோட்ட காணியில் 2010ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசால் கட்டியமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தில் நோர்வூட் பிரதேச சபையை நடத்திச் செல்ல அண்மையில் இந்த மண்டபத்தை நோர்வூட் பிரதேச சபை பெற்றுக்கொண்டது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட இவ் மண்டபம் தொடர்பில் டின்சின் நகர சித்தி விநாயகர் ஆலய கமிட்டிகள் சிலர் தொடர்ந்தும் இவ் மண்டபத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தனர்.

அதனையும் மீறிய நிலையில் குறித்த மண்டபம் நோர்வூட் பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்டுள்ளதால் அதில் பிரதேச சபையை நடத்திச் செல்லும் அதிகாரம் தமக்கு உள்ளது என தெரிவித்து தற்போது பிரதேச சபை காரியாலாய நடவடிக்கைகள் அங்கு முன்னெடுத்து செல்லப்படுகின்றது.

இருந்தபோதிலும் இந்த மண்டப விவகாரம் தொடர்பாக உரிமை கோரும் நடவடிக்கையில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

டின்சின் தோட்ட மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவனத்திற்கு 2009ம் ஆண்டு கொடுத்த வேண்டுக்கோளுக்கமைவாக அவர்களின் தோட்டத்தின் ஒரு பகுதியினை இ.தொ.காவின் முயற்சியில் கலாச்சார மண்டபமாக இக்கட்டிடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இக்கட்டிடம் யாருக்கு சொந்தமானது என்ற அதிகார போட்டியே இந்த நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தவிசாளர் ரவி குழுந்தைவேல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சுமூகமான முடிவு ஒன்று எட்டப்படும் என்ற வாக்குறுதி தவிசாளரால் வழங்கப்பட்டதையடுத்து டின்சின் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க