ஜப்பானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இலங்கை மிகவும் ஆர்வமாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய அரச பாதுகாப்பு அமைச்சரான கென்ஜி ஹரடாவை நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் கடல்சார் பாதுகாப்பில் ஆர்வம் காட்டுவதால், சர்வதேச கடல்சார் பாதுகாப்பையும் சர்வதேச நீரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
கடற்படைத் துறையில் தற்போதுள்ள நெருக்கமான ஒத்துழைப்பை இராணுவத்திற்கும் விரிவுப்படுத்துதல் தொடர்பில் பேசப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வருகை தந்த ஜப்பானிய அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தனேவும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கைக்கு ஜப்பான் வழங்கி வரும் நீண்டகால அபிவிருத்தி உதவிகளுக்கு ஜனாதிபதி இதன் போது நன்றி தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க