விளையாட்டு செய்திகள்

தென்னாபிரிக்காவிடம் போராடி தோற்றது அவுஸ்ரேலியா!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்ரேலிய அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இலங்கை நேரப்படி நேற்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்ற 45ஆவது இந்தப் போட்டியில், 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ஓட்டங்களைப் பெற்றது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில், அணித் தலைவர் ஃபஃப் டூ ப்ளஸிஸ் 100 ஓட்டங்களையும் ரஸ்ஸீ வென் டர் டஸ்ஸேன் 95 ஓட்டங்களையும் குயிண்டன் டீ கொக் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மிட்சல் ஸ்டொக்ஸ் மற்றும் நாதன் லயன் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

326 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 49.5 ஓவர்கள் நிறைவில் இறுதி வரை போராடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 315 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்டத்தில், டேவிட் வோர்னர் 122 ஓட்டங்களையும் எலெக்ஸ் கெரி 85 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும் டுவைன் பெர்டோரியஸ் மற்றும் அண்டிலே பெஹுக்வாயோ ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கருத்து தெரிவிக்க