இலங்கை

நான் ஒருபோதும் அலட்டிக்கொள்ள போவதில்லை! கருணா

அண்மையில் என்னால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக கதைப்பதற்கு சஜித் பிரேமதாசாவுக்கோ அல்லது அனுரகுமார திசாநாயக்கவுக்கோ எந்த விதமான அருகதையும் கிடையாது. ஏனெனில் சஜித் பிரேமதாசவின் தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளையும் ஒரு கோடிக்கும் அதிகமான தோட்டாக்களையும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கி விடுதலைப்புலிகளை ஊக்குவித்தவர். அதேபோன்று அநுரகுமார திசாநாயக்க மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) இயக்கத்தினர் சுமார் 80,000 சிங்கள மக்களை கொன்று குவித்தவர்கள். எனவே இவர்கள் இருவருக்கும் நான் தெரிவித்த கருத்து தொடர்பாக பேசுவதற்கு எந்த விதத்திலும் அருகதை கிடையாது என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தற்போது தென்பகுதியில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கையிலேயே கருணா அம்மான் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், உண்மையில் நான் வேண்டும் என்று அந்தக் கருத்தைக் கூறவில்லை. எனது தேர்தல் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஒரு நல்ல நோக்கத்திற்காக மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் தெரிவித்த கருத்து அது. ஆனால் அவ்வுரையை திரிபுபடுத்துகிறார்கள். அத்தகைய கொடிய போராட்டத்திலிருந்து ஜனநாயக வழிக்குத் திரும்பி என்னை இன்று விமர்சிக்க முற்படுகிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நான் ஜனநாயக வழிக்குத் திரும்பி அரசியல் கட்சியை ஆரம்பித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவன்.கருணா யார் என்பது, எப்படிப்பட்டவன் என தெரிய வேண்டியவர்களுக்கு நன்கு தெரியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் என்னை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே, மீண்டும் சொல்கிறேன், இதைபற்றி நான் ஒருபோதும் அலட்டிக்கொள்ள போவதில்லை என்றார்.

கருத்து தெரிவிக்க