வடக்கு செய்திகள்

மன்னார் சமுர்த்தி பயனாளிகளில் புத்தளத்தினைச் சேர்ந்தவர்கள் இணைப்பு

மன்னார் சமுர்த்தி பயனாளிகளில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் புதிய சமுர்த்தி பயனாளிகளிற்கான உரித்து படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் நகரசபை மைதானத்தில் நேற்று மாலை இடம் பெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 10,113 பேருக்கு உரித்து படிவங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த வயோதிப தாய் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட தனக்கு சமுர்த்தி உரித்து வழங்கவில்லையென்றும், ஆனால் புத்தளத்தை சேர்ந்த 120 பேரின் பெயர்கள் சமுர்த்தி உதவி பெறுபவர்களாக காட்சிப் படுத்தப்படுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட எந்த சமூகத்தினருகாவது சமுர்த்தி உதவியை வழங்குங்கள். ஆனால் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களை இங்கு சமுர்த்தி பயனாளிகளாக இணைக்க வேண்டாம்.

வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இங்கு பயனாளிகளாக இணைக்கப்பட்டார்களா ? என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெளிவுபடுத்த வேண்டும்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க