உலகம்

நாசாவின் மனித விண்வெளிப் பயணத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண்!

நாசாவின் மனித ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூடர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

கடந்த மாத தொடக்கத்தில் தனியார் குழு விமானத்தை விண்வெளியில் நிர்வகித்த பெண் நாசா அதிகாரியான கேத்தி லூடர்ஸ் தற்போது மனித விண்வெளிப் பயணத்தின் முதல் பெண் தலைவராக பதவி நியமிக்கப்பட்டுள்ளார். நாசா 2024ம் ஆண்டில் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்ப தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் மனித ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூடர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், “கேத்தி, கமர்ஷியல் க்ரூ & கமர்ஷியல் கார்கோ திட்டங்களை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார், மேலும் 2024ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்ப நாங்கள் தயாராகும் போது ஹெச்இஓவை(HEO) வழிநடத்த சரியான நபர்” என்றும் கூறியுள்ளார்.

1992 இல் நாசாவில் சேர்ந்த லூடர்ஸ், மே 30 அன்று இரண்டு விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவுவதை மேற்பார்வையிட்டார்.

ஸ்பேஸ்எக்ஸ், போயிங் மற்றும் நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ள பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட விண்வெளி காப்ஸ்யூல்களுக்கான முழுமையான சோதனை திட்டத்தின் பொறுப்பில் பல ஆண்டுகளாக கேத்தி மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளியில் கொண்டு செல்லக்கூடிய விண்வெளி கப்பல்களை உருவாக்குவதில் தலைமை பொறுப்பில் இருந்துள்ளார்.

நாசாவிற்கான வணிக விண்வெளி விமான திட்டங்களை உருவாக்கும் திட்டம் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்டது. வரும் 2024ம் ஆண்டில் கனரக எஸ்.எல்.எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் காப்ஸ்யூலைப் பயன்படுத்தி முதல் பெண் உட்பட இரண்டு விண்வெளி வீரர்களை சந்திரனில் நிலை நிறுத்துவதே தற்போது நாசாவின் முக்கிய திட்டமாகும். ஆனால், இந்த திட்டத்திற்கு ஏற்றால் போல் எந்த நிறுவனம் நிலவில் தரையிறங்கக்கூடிய விண்வெளி சாதனத்தை(Moon lander) உருவாக்கும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

கருத்து தெரிவிக்க