விளையாட்டு செய்திகள்

ஒரே நேரத்தில் களத்தில் மூன்று துடுப்பாட்ட வீரர்கள்.

இந்திய-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஒரே நேரத்தில் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் களத்தில் இருந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பேசப்படும் செய்தியாகியுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று நடைபெற்றது.

இதில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இப்போட்டியில் ஷிகர் தவான் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் 4-ம் இடத்தில் விளையாட ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோர் ஒரே நேரத்தில் களமிறங்கினர்.

இதனால் களத்தில் 3 துடுப்பாட்ட வீரர்கள் இருந்த நிலை உருவானதால் அங்கு சிறு குழப்பம் நிலவியது. பின் ரிஷாப் பண்ட் களமிறங்கினார். ஆனால் ரிஷாப் பண்ட் 19 ஓட்டங்களுடன், ஸ்ரேயாஸ் அய்யர் 5ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,

களத்தில் ஒரே நேரத்தில் 3 பேட்ஸ்மேன்கள் இருக்க, சரியான தகவல் தொடர்பு இல்லாததே காரணம். விக்கெட்டுகள் 10 ஓவர்களுக்கு மேல் தாக்கு பிடித்தால் 4-ம் இடத்தில் ரிஷப் பண்டை களமிறக்கவும், அதற்கு முன்பே விக்கெட்டுகள் விழுந்தால் ஸ்ரேயாஸ் அய்யரை 4-ம் இடத்தில் களமிறக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து தொடர்ந்து வீழுந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் ஒரே நேரத்தில் களம் இறங்கிவிட்டனர் என்று விராட் கோலி கூறினார்.

கருத்து தெரிவிக்க