உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

‘ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும்’ :இராதா

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறட்டும் பட்சத்திலேயே இந்த நாட்டின் பல்வேறு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். அதேபோல அடுத்த ஜனாதிபதி சர்வதேசம் ஏற்றுக்கொள்ள கூடிய ஒருவராகவும் இருக்க வேண்டும் என விசேட பிரதேசங்களுக்கான  அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் புதிய காரியாலய திறப்பும், விசேட கூட்டமும் அமைச்சரின் 67வது பிறந்த தின நிகழ்வும் இன்று 01.08.2019 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கம்பன் கழக தலைவர் சுவாமி சரவணபவநந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான அ. அரவிந்தகுமார், வேலுகுமார், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி.ரஞ்சனி நடராஜபிள்ளை, தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும், உலக தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவருமான ஜெ.செல்வகுமார், உட்பட மேலும் பல முக்கியஸ்தர்களும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்;  தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர்,

இன்று நாட்டில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் முதலாவதாக ஜனாதிபதி தேர்தலே நடைபெற வேண்டும்.

அடுத்த ஜனாதிபதி இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து சமூகத்தினுடைய பிரச்சினைகளையும் தீர்க்க கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமானது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரையில் தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே தீர்மானங்களை நிறைவேற்றும். அந்த தேர்தலில் மக்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ள நிலையில் 50 ரூபாய் விடயத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நடந்துக்கொள்ளும் முறை எமக்கு அதிருப்தியை ஏற்படுத்துகின்றது.

எனவே இந்த விடயத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

கருத்து தெரிவிக்க