உள்நாட்டு செய்திகள்புதியவை

இளைஞன் மீது துப்பாக்கிசூடு : மருத்துவ அறிக்கை வெளியானது

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கியுள்ளது என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மானிப்பாய் – இணுவில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞன் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது.

மானிப்பாயில் உள்ள வீடொன்றைத் தாக்குவதற்கு ஆவா குழுவைச் சேர்ந்தோர் வருவதாக முன்னதாகவே கிடைத்த தகவலின் அடிப்படையில் ரோந்து நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தோர் தப்பிக்க முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 3 மணியளவில் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த நீதிவான், உயிரிழந்த இளைஞனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தவிட்டார்.

இந்நிலையில் இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை, முதுகெலும்பில் பட்டு திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கியுள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க