உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மஹிந்த ஆட்சியமையும் என்பதனாலேயே அரசாங்கத்துக்கு ஆதரவு.

தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தினால் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியமையும். ஆகையாலேயே இந்த அரசாங்கத்தை காப்பாற்ற யோசிக்கின்றோமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

இன்னும் சிறிது காலத்தில் பொதுத் தேர்தல் வரும் இதன்போது மக்கள் தமக்கான அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இதேவேளை தொடர் குண்டுத் தாக்குதல் இடம்பெற போவதாக அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தும் எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகையாலேயே இந்த அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலைமுன்னணி கொண்டுவந்தது.

குறித்த பிரேரணையில் அரசாங்கம் தோல்வியடைந்ததால் பதவி விலக வேண்டும். ஆனால் அவ்வாறு பதவி விலகினால் அடுத்து ஆட்சி அமைப்பது மஹிந்தவாகவே இருக்க முடியும்.

2015ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தியமைக்கு முக்கிய காரணம், மனித உரிமை மீறல்கள், சமூக பொருளாதார உரிமை மீறல்கள் கடந்த ஆட்சியில் இடம்பெற்றன.

இதனால் அதிகளவு தமிழ் மக்களே பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனால் தற்போதைய அரசாங்கம் அத்தகையதொரு செயற்பாட்டில் ஈடுபடவில்லை.

அந்தவகையில் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்தால் சிறுபான்மையினரை எவ்வாறு நடத்துவார்கள் என்று கூறமுடியாது.

மேலும் புதிய அரசில் தமிழ் மக்கள் குறித்த கொள்கை எவ்வாறு அமையும் என்று தெரியாமல் தற்போதைய அரசை எவ்வாறு எதிர்த்து வாக்களிப்பது’ என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க