உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

அமைச்சர் ரவிகருணாநாயக்க மீது கனியவள தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

முகத்துவாரம் பகுதியில் புதிய எரிபொருள் குழாய் மார்க்கத்தை உருவாக்கும் பணிகளின்போது ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கவே பொறுப்பேற்க வேண்டும் என கனியவள தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிப்பொருள் களஞ்சியசாலைக்கு எரிப்பொருளை கொண்டு செல்வதற்காக குறித்த புதிய குழாய் மார்க்கம் உருவாக்கப்படுகின்றது.

குறித்த பிரச்சினைக்கான தீர்வினை உடனடியாக முன்வைக்காத பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவரது அமைச்சின் கீழ் இயங்கும் மின்சாரசபைக்கு எரிப்பொருளை விநியோகிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு முதல் கொலன்னாவை எரிப்பொருள் களஞ்சியசாலைக்கு எரிப்பொருள் விநியோக குழாய் தற்போது பாரிய பாதிப்படைந்துள்ளது.

80 ஆண்டுகளுக்கு முன்னர் 10 அங்குல குழாய் மார்க்கமே இருந்து வந்ததாகவும் அதற்கு பதிலாக 12 அங்குல குழாய் மார்க்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த குழாய் மார்க்கமானது முகத்துவாரம் ஊடாக செல்கின்ற நிலையில் அங்கு வசிப்பவர்கள் அதற்கு தடை ஏற்படுத்துவதாக, அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர் ரவி கருணாநாயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கனியவள தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க