வெளிநாட்டு செய்திகள்

ஜப்பானின் மின்னணு பொருளாதார பிரகடனத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் கடைசி நாளான நேற்று கூட்டுப் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது.

இதில் மின்னணு பொருளாதாரம் தொடர்பான பிரகடனம் ஒன்றும் கொண்டு வரப்பட்டது. நாடுகளுக்கிடையில் சர்வதேச வர்த்தகம் முதலீடு பற்றிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வது, மின்னணு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் , ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே முன் மொழிந்த இந்த பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்து விட்டது.

வர்த்தகம் முதலீடு தொடர்பான தகவல்கள் தேசிய சொத்து எனவும், இதனை பகிர்ந்து கொண்டால் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, விதிமுறைகளை அமைக்க வேண்டும் என்றும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். அதன்படி இந்தியா பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது.

இந்தியாவுக்கு ஆதரவாக இந்தோனேசியா , தென்னாபிரிக்கா போன்ற சில நாடுகளும் கையெழுத்திட மறுத்து விட்டது.

கருத்து தெரிவிக்க