உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

மடு அன்னை திருவிழா- மடு திருத்தலத்தில் அவசர கலந்துரையாடல்

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பாகவும், திரு விழாவுக்கான பாதுகாப்புதொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று காலை மடு திருத்தலத்தில்  இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை,கிறிஸ்தவ கலாசார அலுவல்கள் பணிப்பாளர் சத்தூரி பின்ஜோ, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் , குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் 2 ஆம் திகதி மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

திருவிழா தினத்தன்று 300 பொலிஸார்,25 விசேட அதிரடிப்படையினர்,60 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடி நீர், போக்குவரத்து, சுகாதாரம், வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

எதிர் வரும் 2 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை மற்றும் துணை ஆயர் அன்ரனி ஜெயக்கொடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க