முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 2012ஆம் ஆண்டு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்பட்டு ஒரு லட்சம் ரூபா மானியமாகவும் 2 லட்சம் ரூபாய் கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டு அரச உத்தியோகத்தருக்கான 50 வீடுகள் அமைக்கப்பட்டன
அங்கு குடியேறும் அரச உத்தியோகத்தர்களுக்கான மின்சார வசதி வீதி வசதிகள் குடிநீர் வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட நிலையிலும் குறித்த இடத்தில் இன்று வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை
இந்நிலையில் குறித்த வீடுகள் அனைத்தும் பத்தைகள் மூடி காடாக கிடைப்பதோடு அந்த பகுதியில் பல்வேறு சமூக விரோத சம்பவங்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன
இந்த வீட்டுத்திட்டத்தில் மக்களை குடியேற்றுமாறு பல தடவைகள் மாவட்ட மட்டங்களில் பிரதேச மட்டங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் தெரிவித்தும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் குறித்த பகுதியில் வீட்டு திட்டத்தை பெற்றுக் கொண்டவர்கள் பலர் இரண்டாவது தடவையாகவும் வேறு இடங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொண்டு அந்த இடத்தில் குடியேறி இருக்கிறார்கள்
மக்கள் ஒரு இடத்தில் கூட வீடு பெறமுடியாத நிலை இருக்கின்ற போதும் அரசினுடைய சலுகைகளை இரண்டுமுறை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இது இவ்வாறு இருக்க துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நந்தகுமார் நகர் மாதிரி கிராமத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்திடடத்தில் அரசு அலுவலர்களுக்கென வழங்கப்படட வீடுகள் பூட்டிய நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
அதேபோன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வடகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கைலாய வன்னியன் மாதிரி கிராமம் பண்டாரவன்னியன் மாதிரி கிராமம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் அமைக்கப்பட்டவீடுகளில் அரச உத்தியோகத்தர்களின் வீடுகள் பூட்டப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றன.
கருத்து தெரிவிக்க