இந்தியா

தினசரி இ- பேப்பர் வெளியிடும் சேனல்களை நீக்குக: டெலிகிராம் நிறுவனத்துக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோதமாக தினசரி இ- பேப்பர் செய்தித்தாளை வெளியிடும் சேனல்களை 48 மணி நேரத்துக்குள் நீக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெலிகிராம் நிறுவனத்துக்கு எதிராக, ஜக்ராண் பிரகாஷன் லிமிடெட் நிறுவனம், தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட டெலிகிராம் நிறுவனம் அதன் பயனர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பல்வேறு சேனல்களை உருவாக்க அனுமதித்துள்ளது.

மேலும், டைனிக் ஜாக்ராணின் இ-பேப்பர் தினமும் பி.டி.எப் வடிவத்தில் டெலிகிராம் தளத்தில் பல்வேறு சேனல்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால், எங்களது செய்தித்தாளின் இ-பேப்பர் வடிவம், சந்தா செலுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
பல்வேறு சேனல்கள் வழியாக டெலிகிராம் இ -பேப்பரை பதிவேற்றம் செய்து பரப்புவது எங்களுக்கு கடுமையான நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, அதன் வர்த்தக முத்திரை உரிமைகளையும், பதிப்புரிமையையும் மீறுவதாக உள்ளது.சட்டவிரோத சேனல்களை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே 18, 2020 நிலவரப்படி, டெலிகிராமில் 19,239 சேனல்கள் டைனிக் ஜாக்ராண் இ-பேப்பரை பகிர்ந்துள்ளன. எனவே,இ-பேப்பரை பதிவேற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​’நிறுவனம் துபாயில் இருப்பதால் அது தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விசாரணை முடிவில் நீதிபதிகள், அடுத்த 48 மணி நேரத்துக்குள் சட்டவிரோதமாக தினசரி இ- பேப்பர் செய்தித்தாளை வெளியிடும் சேனல்களை நீக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக இ-பேப்பர்களை வெளியிடும் சேனல்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறும் கூறியுள்ளது.

கருத்து தெரிவிக்க