உலகம்

ஆயுதங்களுக்கு செலவிடும் பணத்தை கொரோனா தொற்று நோய் தடுப்பு ஆய்விற்கு பயன்படுத்துங்கள் — போப் ஆண்டகை பிரான்சிஸ்

ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் பணத்தை கொரோனா போன்ற தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான ஆய்விற்கு பயன்படுத்துங்கள் என , போப் ஆண்டகை பிரான்சிஸ் அரசியல் தலைவர்களை கேட்டுள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவால் உலகளவில் 61,60,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,71,006 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. வத்திக்கான் நகருக்கு வெளியே நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வு ஒன்றில் போப் ஆண்டகை கலந்து கொண்டார். மூன்று மாத காலத்திற்கு பிறகு நடந்த இந்த ஆராதனையில் 130 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போப் ஆண்டகை , “தேசிய தலைவர்கள் தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயற்பட வேண்டும். உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும். நீண்ட கால பொருளாதார மற்றும் சமூக தேவைகளை தீர்த்து வைக்க வேண்டும். ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் பணத்தை கொரோனா போன்ற தொற்று நோய்களை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். ” என்று நாட்டின் தலைவர்களை கேட்டுக் கொண்டார்.

கருத்து தெரிவிக்க