உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

கோட்டாவுக்காக சுபநேரத்தில் கட்டுப்பணம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் இன்று (20) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் சுபநேரமான 12.14 மணிக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ உட்பட கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி மதியம் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக தேர்தல்கள் செயலகத்தில் செலுத்த வேண்டும்.

இதுவரையில் நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அதேவேளை, ஒக்ரோபர் 7ஆம் திகதி , வேட்புமனுத் தாக்கல் இடம்பெறும். அன்று காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க