உள்நாட்டு செய்திகள்புதியவை

நுவரெலியாவில் விபத்து: இருவர் உயிரிழப்பு

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கந்தப்பளை காவல் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்டம் “ஐஸ் பீலி” என்றழைக்கப்படும் இடத்தில், சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, உயிரிழந்ததாக கந்தப்பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

வலப்பனை – மந்தாரநுவர – எலமுல்ல பிரதேசத்தைச் டி.பி.ரூபசிங்ஹ (வயது 50) ரோஹினி குமாரி (வயது 45) ஆகியோரே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்விருவரும் கணவன், மனைவியென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி குறித்த முச்சக்கரவண்டியில் தாய், தந்தை, 06,16,19 வயதுடைய சிறுவன், சிறுமிகள் ஆகியோர் பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை கந்தப்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க