உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தேயிலை துறையையே கைவிட்டு செயற்படவேண்டிய நிலை – வேலுகுமார்!

“இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பிரதான இடத்தைப் பிடித்திருந்த தேயிலைப் பயிர்ச்செய்கையானது காலப்போக்கில் பின்னிலைக்குத் தள்ளப்பட்டது.

தேயிலை தொழிற்துறை குறித்து நிலையானதொரு கொள்கை வகுக்கபடாததாலேயே நாட்டின் பொருளாதாரத்துக்கு கைகொடுத்த துறையையே கைவிட்டு செயற்படவேண்டிய நிலை உருவாகியுள்ளது.”

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08.08.2019) நடைபெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின்கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“இலங்கையின் ஏற்றுமதியை எடுத்துக்கொண்டால் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்துடே செல்கின்றது.

ஆரம்பகாலத்தில் தேயிலை ஏற்றுமதிமூலமே இலங்கை கூடுதலான வருமானத்தை பெற்றுக்கொண்டது.

சிறு வாசனை திரவியங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் தேயிலை மூலமே சர்வதேச சந்தையில் இலங்கைக்கு நற்பெயரும், ‘சிலோன் டீ’ என்ற நாமமும் கிடைத்தது.

ஆரம்பத்தில் பெருந்தோட்டத்துறையானது தனியார் உடமையாக இருந்தபோது தேயிலை ஏற்றுமதியில் முதன்மை இடத்தை பிடித்திருந்தது.

எனினும் 1970 இற்கு பிற்பட்ட காலத்தில் அரசுடமையாக்கப்பட்ட பின்னர் நிலையானதொரு கொள்கை வகுக்கபடாததால் அது படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

அதன்பின்னர் தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன.

இருந்தும் இற்றைவரையிலும் நிலையானதொரு கொள்கை வகுக்கப்படாமை வேதனைக்குரிய விடயமாகும்.

இவ்வாறு உறுதியானதொரு கொள்கையின்மையாலும், பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சுப் பதவியை வகிக்கும் நபர்களின் தன்னிச்சையான முடிவுகளாலும் தேயிலை தொழிற் துறையானது இன்று இலக்கற்ற திசையை நோக்கி பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக தேயிலை தோட்டங்களில் மரங்களை வளர்ப்பதற்காக தேயிலை பயிர்செய்கை கைவிடப்படுவதுடன், பல பகுதிகளில் இறப்பர் தோட்டங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல் தெற்கில் சில பகுதிகளில் முள்ளு தேங்காய் பயிரிடப்படுகின்றது.

எனவே, பெருந்தோட்டத்துறையை நவீன யுகத்துக்கேற்ப கட்யெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் காலப்போக்கில் அழியும் அபாயம் இருக்கின்றது.

கண்ணுக்கு தெரிந்த, கைகளுக்கு எட்டிய தூரத்திலுள்ள துறையை மேம்படுத்தாலும் ஏனைய துறைகள்மீது கவனம் செலுத்துவது சாதகமான பெறுபெறுகளை வழங்குமா என்பது கேள்விக்குறியே.

அதேவேளை, பெருந்தோட்டத்துறையிலிருந்து இன்று 30 சதவீதமான பங்களிப்பே கிடைக்கின்றது.

ஆகவே, தற்போது பரிணாம ரீதியிலான மாற்றத்தை நோக்கி இத்துறையை நகர்த்த வேண்டும். பெருந்தோட்டங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும்.” என்றார்.

கருத்து தெரிவிக்க