உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘முஸ்லிம் அரசியல் வாதிகள் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர்’

அத்துரலிய ரத்தன தேரரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து கூட்டாக பதவி துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் இன்று (29) மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர்.

இதன்படி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் நகர  திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார்.

அத்துடன், கைத்தொழில் மற்றும் வர்த்தக , கூட்டுறவு அபிவிருத்தி, தொழில்பயிற்சி மற்றும் திறன்விருத்தி அமைச்சுப் பதவியை ரிஷாட் பதியுதீன் மீண்டும் பொறுப்பேற்றார்.

அதேவேளை, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக அமீர் அலியும்,  துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹ்ருவ் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற  உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹாரிஸ், அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களான கபீர் ஹாசீம், அலீம் ஆகியோர் இதற்கு முன்னர் பதவியேற்றிருந்தனர்.

 

கருத்து தெரிவிக்க