சினிமா

மணிகண்டன் இயக்கத்தில் பைத்தியமாக நடிக்கும் விஜய் சேதுபதி!

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தனது அடுத்தப் படத்தில் பைத்தியமாக நடித்து வருகிறார்.

”காக்கா முட்டை” படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி வைத்தவர் இயக்குநர் மணிகண்டன். இப்படம் உலக அளவில் கொண்டாடப்பட்ட படமாகும். தமிழகத்திலும் அப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது.

குறும்படங்கள் இயக்கும் காலத்தில் இருந்தே விஜய் சேதுபதியும், மணிகண்டனும் நண்பர்கள். இது திரை வாழ்விலும் தொடர்ந்தது. விஜய் சேதுபதியை வைத்து, அவர் இயக்கிய ”ஆண்டவன் கட்டளை” திரைப்படம் வசூலில் கலக்கிய படமாகவும், அதே நேரத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்லும் தரமான படமாகவும் இருந்தது.

இதன் பிறகு புதுமுகத்தை வைத்து ”கடைசி விவசாயி” படத்தை தன் சொந்த முயற்சியில் இயக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இந்த முயற்சி சரியாக நடைபெறவில்லை. வித்தியாசமான கதைக் களம் மற்றும் கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் விஜய் சேதுபதி.

தெலுங்குப் படம் ஒன்றில் வில்லனாக நடிப்பதோடு, ஹீரோயினின் தந்தையாகவும் நடிக்கிறார். இப்படி தேடித்தேடி வித்தியாசமான படங்களில் நடிப்பவர், மணிகண்டன் படம் பற்றி கேள்விப்பட்டு தானே அப்படத்தில் நடிப்பதாக கூறி நடித்து வருகிறார்.

மிக வித்தியாசமான வேடத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இயக்குநர் மணிகண்டன் இயக்கும் இப்படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசும் இப்படத்தில், விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக விஜய் சேதுபதி போட்டிருக்கும் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கருத்து தெரிவிக்க