கிழக்கு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி விடுதலை!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட திருகோணமலையை சேர்ந்த க.அழகுதுறை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆயுள்தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் அவரை விடுதலை செய்திருந்திருந்தனர்.

அத்துடன், அவர் மீது திருகோணமலை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனையை இரத்து செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிக்கு எதிரான சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டிக்களிலிருந்தும் விடுவித்துள்ளது.

கைக்குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்களுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி திருகோணமலை – லங்காப்பட்டிணம் பகுதியில் க.அழகுதுறை கைது செய்யப்பட்டிருந்தார்.

விசாரணைகளை அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்றம் பிரதிவாதிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக பிரதிவாதிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, பிரதிவாதிக்கு எதிரான சாட்சியங்கள் உரிய முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் அறிவித்தனர்.

இதனையடுத்து, அரச பகுப்பாய்வு அறிக்கை உத்தியோகபூர்வமாக தயாரிக்கப்படவில்லை எனவும் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்ட தண்டனை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்துள்ளது.

கருத்து தெரிவிக்க