அழகு / ஆரோக்கியம்

குங்குமாதி தைலம் கரும்புள்ளிக்கு நல்ல தீர்வு!

பல நூற்றாண்டுகளாக குங்குமாதி தைலம் நம் பாரம்பரிய ஆயுர்வேத மருந்தாக பயன்படுகிறது. குங்குமா என்பது குங்குமப்பூவை குறிக்கிறது, ஆனால் குங்குமப்பூ மட்டுமே அல்லாமல் 16 விதமான இயற்கை பொருட்கள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன. குங்குமப்பூ என்பது இதில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாகும், வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம், இரும்பு சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதில் நிறைந்துள்ளன.

ஹைபர் பிக்மண்டேஷன் என்பது நம் சருமத்தின் சில பகுதிகளில் சிறு சிறு திட்டுக்களாக இருக்கும் அல்லது கருப்பு நிறத்தில் பெரிய திட்டுக்களாகவும் காணப்படும். சருமம் ஒரு இடத்தில் சாதாரணமாகவும், இன்னொரு இடத்தில் திட்டுக்களாகவும் இருப்பது நம் சருமத்தின் அழகை கெடுத்துவிடும். குங்குமாதி தைலம் தடவி வந்தால், நம் மொத்த சருமமும் ஒரே நிறத்தில் ஜொலிப்பதை பார்க்கலாம்.

குங்குமாதி தைலத்தில் உள்ள குங்குமப்பூ போன்ற பொருட்களில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது. நம் சருமத்தை பாதிப்பு ஏற்படாமல் சூரிய ஒளியிடமிருந்து பாதிகாக்கிறது. புறவூதா கதிர்களிடம் இருந்து காக்கும் கவசமாக செயல்பட்டு சூரிய ஒளியால் பாதிப்பு அடைந்த சருமத்தை சீர்படுத்தி, சருமத்திற்கு மீண்டும் பொலிவு தரும் பணியை செய்கிறது. குங்குமப்பூ சூரியக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும் ஒரு இயற்கையான பொருளாக இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட இடங்களில் குங்குமாதி தைலம் தடவி வர கருமை மற்றும் சூரிய அழற்சி ஏற்படாமல் தடுக்கிறது.

கரும்புள்ளி, வடுக்கள், முகப்பருக்கள் ஆகியவற்றிற்கு குங்குமாதி தைலம் ஒரு இயற்கை தீர்வாக இருக்கிறது. நீங்காத முகப்பரு பிரச்சனைக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். இந்த தைலத்தை முகத்தில் தடவி வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி இறந்த செல்களையும் வெளியேற்றி விடும். இதனால் சருமத் துளைகள் மாசுக்களால் அடைபடாமல் இருக்கும். மேலும் இது முகப்பரு தழும்புகள் மற்றும் இடுப்பில் ஏற்படும் பிரசவ தழும்புகள் ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது.

கருத்து தெரிவிக்க