உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மஹிந்த அணிக்கு சு.க. காலக்கெடு விதிப்பு!

‘மொட்டு’ சின்னம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்காக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிர்வரும் 5ஆம் திகதிவரை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குகுழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (30) 7.30 மணிக்கு அவரது வதிவிடத்தில் கூடியது.

சுமார் மூன்றரை மணிநேரம்வரை நீடித்த இந்த சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல், பொதுஜன பெரமுனவுடனான அரசியல் கூட்டணி உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக ” சின்னம் முக்கியமில்லை. ஒருமித்த எண்ணங்கள்தான் முக்கியம். எனவே, கோட்டாபய ராஜபக்சவையே ஆதரிக்க வேண்டும்.” என ஒரு சிலரும்,

” மொட்டு சின்னத்தில் தேர்தலை சந்தித்தால் சுதந்திரக்கட்சியின் தனித்துவம் இல்லாமல் போய்விடும் என்பதால் மாற்றுவழி குறித்து பரீசிலனை செய்ய வேண்டும் என மேலும் சிலரும் கருத்துகளை முன்வைத்தனர்.

அத்துடன்,ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்துவத்தை ராஜபக்சக்களுக்கு சார்பான உறுப்பினர்கள் சிலர் எடுத்துரைக்கையில் அதற்கு சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் கூட்டத்தில் சூடான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

இறுதியில் ‘மொட்டு’ சின்னத்தை மீள்பரிசீலனை செய்வதற்காக பொதுஜன பெரமுனவுக்கு 5 ஆம் திகதிவரை அவகாசம் வழங்குவதற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கைகளை இன்று கோட்டா தரப்புக்கு அனுப்பி வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டணி அமையும் பட்சத்தில் கைச்சாத்திடவேண்டிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் குறித்து சுதந்திரக்கட்சியால் அனுப்பிவைக்கப்படும் யோசனைகளுக்கு பொதுஜன பெரமுனவிடமிருந்து இரு நாட்களில் அக்கட்சி பதிலை எதிர்பார்க்கின்றது.

அதன்பின்னர் 5 ஆம் திகதி கட்சியின் மத்தியசெயற்குழு மீண்டும்கூடி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் என சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, ‘மொட்டு’ சின்னத்தை கைவிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாரில்லை என ராஜபக்சக்கள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை மொட்டு சின்னத்திலும் அதன் பின்னர் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை பொது சின்னத்திலும் சந்திக்கலாம் எனவும் யோசனை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க