உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி

நாட்டில் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்ற பொழுதும் மன்னார் மாவட்டத்தில்
தொடர்சியாக வறண்ட காலனிலை நிலவி வருகின்றது.
 இதனால்  மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற  மேட்டு நிலப் பயிர் செய்கை பாதிப்புக்குள்ளாகியதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு சில வாரங்களாக மன்னார் பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்ற போதும் மழை சிறிய அளவு கூட கிடைக்கவில்லை.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடும் வறட்சி

நிலவி வருகின்றமையால் கிணற்று நீர் வற்றிய நிலையில் காணப்பட்டு வருகின்றது.

குறிப்பாக நானாட்டான், மாந்தை, மடுப் பிரதேசங்களில் விவசாய குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் இறுதி அறிக்கையின் படி இவ் வறட்சி காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள 104 கிராம அலுவலகப் பிரிவுகளில் 18ஆயிரத்து 704 குடும்பங்களைச் சார்ந்த 63ஆயிரத்து115 நபர்கள் நேரடியாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 13ஆயிரத்து 416 குடும்பங்களைச் சார்ந்த 46 ஆயிரத்து  632 நபர்களுக்கு மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை மூன்று லொறி பெளசர்களிலும், ஐந்து டிரக்ரர் பவுசர்களிலும் நாளாந்தம் 7101 லீற்றர் குடிநீர் வழங்கி வருவதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இவற்றில் மடு, முசலி பிரதேச செயலகப் பிரிவுகளே குடிநீர் பிரச்சனைகளுக்கு
அதிகமாக முகம் கொடுத்து வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மடு பிரதேச செயலகப் பிரிவில் 4099 குடும்பங்களும், முசலிப் பிரதேசத்தில்
3723 குடும்பங்களும் குடிநீர் பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுத்து
வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் குடிநீர் வழங்குவதற்காக எட்டு மில்லியன் ரூபா நிதி அரசிடம்
கோரியிருக்கின்ற போதும் இதுவரை இரண்டு மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்
பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் ஏனைய நிதிகள் விரைவில்
விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும்

தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க