வெளிநாட்டு செய்திகள்

அதிபர் பதவிக்கு ஆபத்தா…

2018 ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

நிஸினி சோஃப்கோராடில் கார் தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளர்களின் மத்தியில் பேசுகிறபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

65 வயதாகும் புதின் 2000ம் ஆண்டு முதல் முதலில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டு முறை அதிபராக இருந்த பின்னர், அவருக்கு அடுத்து வந்த டிமிட்ரி மெட்வதேவின் அரசில், அவர் பிரதமராக ஒரு முறை பதவி வகித்தார்.

அதிபர் பதவி காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகள் என்று விரிவாக்கப்ட்ட பின்னர், 2012 ஆம் ஆண்டு, புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றி பெற வாய்ப்பு

ரஷ்யாவின் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி நிதி முறைகேடு வழக்கு ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவராகிவிட்டார்.

தம் மீது சுமத்தப்பட்ட நிதிமுறை கேடு குற்றச்சாட்டு பொய் என்று கூறியுள்ள நவல்னி இவ்வழக்கு அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் கூறிவருகிறார்.

இந்நிலையில், டி.வி. பத்திரிகையாளர் க்சேனியா சோப்சாக் என்பவர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

எனினும், மார்ச் மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலில், புதின் எளிதாக வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான ரஷ்யர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் புதின். சிரியாவின் உள்நாட்டுப் போரில் உறுதியாகத் தலையிட்டது, உக்ரைனிடமிருந்து கிரீமியாவை ரஷியாவுடன் சேர்த்துக்கொண்டது ஆகிய நடவடிக்கைகள் மூலம் உலக அளவில் ரஷியாவின் பெருமையை மீட்டெடுத்தவர் புதின் என்று ரஷ்யர்கள் பார்க்கிறார்கள்.

அதே நேரம், அவர் ஊழலை ஊக்குவிப்பதாகவும், சட்டவிரோதமாக கிரீமியாவை சேர்த்துக்கொண்டதால் சர்வதேசக் கண்டணத்துக்கு வழி வகுத்ததாகவும் அவரது விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

கருத்து தெரிவிக்க