விளையாட்டு செய்திகள்

இந்திய வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கட் போட்டியில் விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டது.

உலகக்கிண்ண தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை நேற்று எதிர்கொண்டது.

இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் துடுப்பெடுத்தாடிய போது , முகமது சமி வீசிய பந்துக்கு விராட் கோலி டி.ஆர்.எஸ். முறையில் எல்.பி.டபிள்யூ. கேட்டு நடுவரிடம் முறையிட்டார்.

ஆனால் அந்த பந்து ஸ்டம்பில் படாமல் சென்றுள்ளது. இது டி.ஆர்.எஸ். முறையில் தெரிந்தது. இதனால் கோலி கேட்ட விக்கட் இழப்பு தவறானது என நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில், போட்டியில் ஐ.சி.சி.யின் நடத்தை விதி 1ஐ மீறியுள்ளார் என விராட் கோலி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டி ஒன்றில் கூடுதலாக மேல்முறையீடு செய்வது என்ற நடத்தை விதி 2.1 ஐ மீறிய செயலில் கோலி ஈடுபட்டு உள்ளார்.

இதன்படி விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க