உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார் – ரவிகரன்.

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்தினை மறுசீரமைப்புச் செய்து, கிரி இப்பன் வெவ என சிங்கள பெயர் மாற்றி, அந்த தமிழர்களின் பூர்வீக குளத்தையும் அதன் கீழுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களையும் சிங்கள மக்களுக்கு அபகரித்துக் கொடுத்ததன் மூலம், ஜனாதிபதி அந்தக் காணிகளுக்கு உரிமையான தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துவிட்டதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்

வெலி ஓயா என்று தற்போது அழைக்கப்படும் தமிழர்களின் தொன்நிலப் பகுதியில் தமிழர்களின் பூர்வீக குளத்தை ஜனாதிபதியவர்கள் கிரி இப்பன் வெவ என்ற பெயரோடு திறந்து வைத்ததுடன், சிங்கள மக்களிடம் கையளித்திருந்தார்.

ஜனாதிபதியின் இத்தகைய செயலால் அப்பகுதியில் உள்ள காணிகளுக்கு உரித்துடைய தமிழ் மக்கள் அதிர்சிக்குள்ளாகியிருந்தனர்.

இந் நிலையில் இது தொடர்பில் இன்று முல்லைத்தீவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினுடைய காணிக் கொள்கையானது இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைப்பதாக அமையக்கூடாது. என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய அறிக்கையில்கூட அது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நியைில் தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள், மகாவலி (எல்) என்ற போர்வையிலே 1950,1960,1970ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் உள்ள இந்தக் காணிகள், தற்போது அபகரிக்கப்பட்ட நிலையில் உள்ளதைப் பலதடவைகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் காணிகளில் 1948ஆம் ஆண்டிற்கு முன்னைய காலப்பகுதி ஆவணங்கள் கூட ஒருசிலர் தற்போதும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் காலங்காலமாக தமது வாழ்வாதாரத்தைப் பாவித்து வந்த இந்த நிலங்களை விட்டு 1984ஆம் ஆண்டு வலுக் கட்டாயமாக எங்களுடைய மக்கள் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணிப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

கந்தர் – வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை – தியாகராசா, துரைச்சாமி – துரைராசலங்கம், முத்தையா – தங்கராசா, தம்பிஐயா – கனகையா உள்ளிட்ட 63பேருடைய பெயர்கள் அவர்களுடைய ஏக்கர் அளவுகள், என ஆவணங்கள் உள்ளன.

அதேபோல், அடையக்கறுத்தான் காணியில் நல்லதம்பி – முருகுப்பிள்ளை, வேலுப்பிள்ளை – சிவக்கொழுந்து, பூ.கந்தையா, செல்லப்பு இராசேந்திரம் உள்ளிட்டவர்களுடைய 45பயனாளிகளுடைய பெயர்விபரம் மற்றும் ஏக்கர் விபரம் எல்லாம் எங்களிடம் இருக்கின்றது.

எங்களிடம் மட்டுமல்ல இது அரசாங்கத் திணைக்களங்கள் அதாவது, சம்பந்தப்பட்ட பகுதியினரிடமும் இந்த விபரங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 25ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களின்படியும், மாவட்ட செயலக புள்ளி விபரங்களின்படியும் 2919 ஏக்கர் 625 பயனாளிகளுக்குரிய காணிகள் இந்த அபகரிப்புக்குள் இந்தக் காணிகளும் உள்ளடங்குகின்றன என்ற அறிக்கை தரப்ட்டிருக்கின்றது. அந்த அறிக்கையும் என்னிடம் இருக்கின்றது.

இந்த வகையிலே தற்போது அரசுத் தலைவர் அவர்கள், கடந்த 08.06.2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய அபிவிருத்தி என்ற வகையிலே இங்கு வருகைதந்து சில அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தியதாக எல்லா இடமும் விளம்பரப்படுத்தப்பட்டது.

அதில் ஒரு நடவடிக்கையாக இந்த ஆமையன் குளம் பகுதிக்குச் சென்று கிரி இப்பன் வெவ என்ற பெயரோடு ஏற்கனவே தமிழ் மக்களால் காலங்காலமாக பாவிக்கப்பட்டுவந்த அந்தக் குளத்தோடு சேர்ந்த காணிகள் னைத்துக்குமான அந்தக் குளம் மறுசீரமைக்கப்பட்டு, இப்போது குடியேற்றவாசிகளாக இருக்கின்ற அந்தச் சிங்கள மக்களுக்காக அந்தக் குளத்தினைத் திறந்து வைத்துள்ளார்.

இது தமிழ் மக்களுக்குச் செய்யும் பாரிய துரோகம் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றேன்.

கருத்து தெரிவிக்க