இந்தியா

அசாம் எரிவாயு கிணற்றில் பயங்கர தீ..

குவஹாத்தி: அசாம் மாநிலம், பக்ஜான் (baghjan) பகுதியில் ஆயில் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு கிணற்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களுக்கும் நெருப்பின் பாதிப்பு எதிரொலித்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து தீயணைப்பு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அசாமின் டின்சுகியா மாவட்டத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் (ஓஐஎல்) இயற்கை எரிவாயு உற்பத்தி கிணறு உள்ளது. இங்குதான் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் தொடங்கிய தீயில் இருந்து எழுந்த புகை, 10 கி.மீ தூரத்தில் இருந்தும் பார்க்க முடிவதாகவும், இது அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

எரிவாயு வயல் பகுதியில் துப்புரவு பணிகள் நடைபெற்று வரும் போது தீப்பிடித்ததாக ஆயில் இந்தியா தெரிவித்துள்ளது. ஆயில் இந்தியா, தனது அறிக்கையில், இதுபற்றி கூறுகையில், தீ விபத்து நடந்த இடத்தை சுற்றி போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், அனைத்து ஆயில் இந்தியா மற்றும் ஓ.என்.ஜி.சி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) குழுக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசினார். நிலைமையைக் கண்காணிக்க தொழில்துறை அமைச்சர் சந்திரமோகன் படோவரியை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்.டி.ஆர்.எஃப்) விரைந்துள்ளனர்.

இந்திய விமானப்படை மற்றும் ராணுவம், தீயணைப்பு நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளன. விமானப்படை மூன்று தீயணைப்பு கருவிகளை அனுப்பியுள்ளது, மேலும் ராணுவம் அந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி துணை ராணுவப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தொடர் முயற்சிகளுக்கு பிறகும் தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை.

இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து எரிவாயு தீ விபத்து அணைப்பு வல்லுநர்கள் குழு அசாம் கிளம்பியுள்ளது. இந்த கிணற்றை முழுவதுமாக மூடுவதற்கு நான்கு வாரங்கள் ஆகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் குவஹாத்தியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பக்ஜான்.
இந்த எண்ணெய் வயல் மாகுரி-மோட்டாபுங் சதுப்பு நிலத்திற்கு அருகே அமைந்துள்ளது. டிப்ரு-சைகோவா தேசிய பூங்காவின் சுற்றுச்சூழல் மண்டலமும் இங்குதான் அமைந்துள்ளது. நிறைய பறவைகள் வாழும் பகுதி இது.

இந்த எரிவாயு கிணற்றிலிருந்து, மே 27ம் தேதி எரிவாயு லீக் ஆக துவங்கியுள்ளது. கடந்த 14 நாட்களாக எரிவாயு கசிந்து வருகிறது. நேற்று முதல்தான் நெருப்பு வெளிப்பட்டது. இதனால் இந்த பிராந்தியத்தின் சதுப்பு நிலங்கள், விவசாயம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பக்கத்து கிராமங்களில் நெல் வயல்கள், குளங்கள் மாசுபட்டுள்ள. ஒவ்வொரு நாளிலும் இப்பகுதிக்கு, அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இங்குள்ள பல சிறு தேயிலை விவசாயிகள் தங்கள் தேயிலைத் தோட்டங்களில் எண்ணை கிணறு தீ விபத்தின் தாக்கம் இருப்பதால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக குமுறுகிறார்கள்.

எரிவாயு கிணற்றை சுற்றிலும் உள்ள சுமார் 2 கி.மீ பகுதிகளில் வசிக்கும் குறைந்தது 6,000 பேர் வெளியேற்றப்பட்டனர். நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயில் இந்தியா லிமிடெட் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ .30,000 நிதி நிவாரணத்தையும் அறிவித்துள்ளது.
இப்போதைய நிலவரப்படி சுமார் 6 கிராமங்களில் தீ பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க