உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

குருநாகல் வைத்தியர் தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துகளை ஈட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மீதான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு இன்று (27) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் குழு, முழுமையான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர், வைத்தியர் நவின் டி சொய்சா தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துகளை ஈட்டியமை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பில் குருணாகலை வீரசிங்க மாவத்தையைச் சேர்ந்த வைத்தியர் சியாப்டீன் மொஹமட் ஷாஃபி (42) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வைத்தியர் தொடர்பில், மகப்பேற்று சத்திரசிகிச்சை செய்துகொண்ட தாய்மார் இருவர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் வைத்தியசாலையில் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என குருணாகலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்ததுடன் விசேட குழுவொன்றையும் அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க