நீராவியடிப் பிள்ளையார் முன்றலில் நடந்தேறிய நீதிக்குப் புறம்பான செயல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் அதை மீறி இருக்கின்றமை தொடர்பில் பொது நல வாய கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள அனைத்து பிரதி நிதிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
-அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
பொது நல வாய நாடுகளின் கூட்டத்தொடர் இந்த முறை உகண்டா நாட்டிலே நடைபெறுகிறது.இந்த பொது நலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு பதிலாக நான் தலைமை தாங்கி வந்துள்ளேன்.
பல்வேறு நாட்டு சபாநாயகர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இக்கூட்டத் தொடரிலே அவர்களோடு தனிப்பட்ட ரீதியில் இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினை சம்பந்தமாக விடயங்களையும் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதித்துறையின் மீதான தவறான அடாவடி நடவடிக்கைகள் பற்றியும் நேரடியாக அவர்களுக்கு நிலைமையை எடுத்து விளக்கக்கூடிய அரிய சந்தர்ப்பமாக நான் இதை பயன்படுத்தியுள்ளேன்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொது நலவாய நாட்டு பிரதி நிதிகளிடம் நேரடியாக எடுத்துச்செல்லும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சினைகள், இன்னும் முடிவுக்கு வராத பிரச்சினைகள் மற்றும் தற்போது நீராவியடிப் பிள்ளையார் முன்றலில் நடந்தேறிய நீதிக்குப் புறம்பான செயல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் அதை மீறி இருக்கின்றமை என்பதை மிகத்தெளிவாக ஒவ்வொரு தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடம் நான் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக் கூறியுள்ளேன்.
இன்னும் பலரிடம் அவர்களை சந்திக்கின்ற பொழுது இந்த விடயங்களை நான் எடுத்துக் கூறவுள்ளேன்.
இது ஒரு நல்ல சந்தர்ப்பம். தமிழ் மக்களுடைய பிரச்சினையை நேரடியாகவே தமிழ் மக்களுடைய பிரதிநிதி என்ற வகையிலே அதுவும் வன்னி மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் பங்கு பற்றும் அனைத்து பிரதிநிதிகளிடமும் எடுத்துரைப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.




கருத்து தெரிவிக்க