உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘கோட்டாபய வெற்றிபெற்றால் முள்ளிவாய்க்காலில் நினைவு சதுக்கம் அமையப்பெறும் ‘

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றால் முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தால் கொல்லப்பட்ட பொது மக்கள், ராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோரை அஞ்சலிக்கும் வகையில் நினைவு சதுக்கம் அமைக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அந்த நினைவு சதுக்கத்தில் அஞ்சலி செய்யும் பொது நினைவு நாள் ஒன்றும் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலமை அலுவலகத்தில் ,ன்று ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு எமக்கு நம்பிகை அளித்திருக்கிறது’ என்ற தலைப்பில் ஈ.பி.டி.பி கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான விளக்க குறிப்பு வழங்கப்பட்டிருந்தது.
அந்த விளக்க குறிப்பில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றால் முள்ளிவாக்கால் வரை யுத்தத்தில் கொல்லப்பட்ட சகல மனித உயிர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் பொதுச் சதுக்கம் அமைக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது.
அதில் எழுதப்பட்டிருந்த சகல மனித உயிர்களும் என்ற சொற்பதத்தில் யார் யார் உள்ளடக்கப்படுவார்கள் என்றும் அதில் மாவீரர்களும் உள்ளடக்கப்படுவார்களா? என்றும் அங்கிருந்த ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த நினைவு சதுக்கம் யுத்தத்தால் கொல்லப்பட்ட மனித உயிர்களுக்காகவே அமைக்கப்படவுள்ளது.
அது இலங்கை நாட்டை சேர்ந்த அனைவருக்குமானதாக அமையும். அது தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ராணுவத்தரப்பில் இருந்த உயிரிழந்தவர்களுக்குமான சதுக்கமாக இருக்கும் என்றார்.
[நிருபர் தம்பிராஜா பிரதீபன்]

கருத்து தெரிவிக்க