ஜோதிடம்

வாரி வழங்கும் வள்ளல் சனி! -16 நிறைவு

– தமிழகத்திலிருந்து குணா

 சனியைப் பற்றியதான நிறைவுப் பகுதியினைப் பார்ப்போம். நிறைவு என்றாலே அது இலாபமே!

எச்செயலை செய்தாலும், எந்நேரத்தில் செய்தாலும் எதன் பொருட்டு செய்தாலும் முடிவில் கிட்டும் பலனே அதற்கான இலாபம் அல்லது நட்டம்.
பெரும்பாலும் இலாபத்தில் முடிவதே இனிப்பு! நட்டத்தில் முடிவது கசப்பு!வியர்வை சிந்தி உழைப்பவனுக்கு உயர்வே இலாபம், வியாபாரிக்கு இலாபமே
இலாபம். இல்லாதவனுக்கு கிடைத்தெல்லாம் இலாபம். இருப்பவனுக்கோ நிலையான வாழ்வே இலாபம். சம்சாரிக்கு சந்தோஷமே இலாபம். ஞான
வாழ்க்கை மேற்கொண்டவனுக்கு இறுதியில் கிட்டும் ஞானமே இலாபம்!

இதை எதற்காக சொல்கின்றேன் என்றால் இலாபம் என்பது பணம் குறித்த விஷயம் மட்டுமே இல்லை! எதை நோக்கி செயல்படுகிறோமோ, அதன் முடிவினையும் இலாபம் என்றே சொல்ல வேண்டும். இறைவன் திருவடியே இலக்கு என்றிருப்பவனுக்கு பொன்னும், பொருளும் மண்ணுக்கு சமம். மாறாக, பொருளின்மீது மோகம் கொண்டவனுக்கு இறையருளின் அருமை எப்படி புரிபடும்? சிந்தையை பொருட்களே வியாபிக்கும் போது ‘சிவம்’ அங்கெப்படி
சிறந்து விளங்கும்?

ஆக இலாபம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட நிலைப்பாட்டினைக்கொண்டது. எது எப்படியாயினும் பதினொன்றாம் இடமாகிய இலாபஸ்தானத்தில் சனி
நிற்பது சிறப்புதான்! அதே வீட்டிற்குரிய கிரகத்தின் தன்மையிலேயேதான் சனி வளர்ச்சிகள் உண்டாக்குவார் என்பதிலும் எவருக்கும் சந்தேகம் வேண்டாம்!
அதுமட்டுமின்றி சனியுடன் நிற்கும் கிரகங்கள் மற்றும் சனியைப் பார்க்கும் பிற கிரகங்களின் பார்வைகள் சம்பந்தப்பட்டும் பலன்கள் மாறுபடும்.

உதாரணமாக ஒருவருக்கு 11- ம் இடம் சுக்கிரனாக வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.

அங்கே சனியிருந்தால் ஜாதகருக்கு பெண்கள்மூலம் இலாபம் மற்றும் கலை, ஆடை, சுவை, அழகு, அணிகலன், திருமணம் சம்பந்தப்பட்ட தொழில்களில் இலாபம் ஏற்படும்.
அதுவே குரு வீடாக இருந்தால் ஆன்மீகம், குருமார்கள், வேள்வி, மந்திரம், புத்தகம், கோயில், விவசாயம், மரம் சார்ந்த தொழில்கள் அமைந்து வரவு ஏற்படும்.
செவ்வாய் வீடாய் இருப்பின் எரிபொருள், வாகனம், மணல், இயந்திரம், அச்சிடுதல், வீடு கட்டுதல் போன்றதான தொழில்கள் அமைந்து பொருளீட்டுவது உண்டாகும்.
புதனாக இருந்தால் எழுத்து, ஜோதிடம், வேதியல், பொருட்கள், மருத்துவம், படிப்பு, சூது மற்றும் புத்திதீர்க்கம் சம்பந்தப்பட்ட தொழில்கள்மூலம் இலாபம்.
சூரியனாக இருந்தால் அரசு, அரசியல், உயர் பதவிகள், மின்சாரம், ஒளி, கண், பல் சம்பந்தமான தொழில்கள் இலாபத்தைக் கொடுக்கும்.
சந்திரனாக இருப்பின், நதி, நீர், கடல் அணை சம்பந்தப்பட்டதாகவும், அயல் தேசம், அன்னிய மொழி, பொருட்கள், மது வியாபாரம் தொழில்கள் ஏற்பட்டு ஏற்றம் வரும்.
சனி வீடாகவே இருந்தால் விவசாயம், வேலையாட்கள், வாயு, இரும்பு, கால்நடை, பண்ணைகள், அரசியல், அடிமட்டத் தொழில்களில் அதிரடி இலாபங்கள் போன்றவையும் கிட்டும்.
இராகு – கேதுகளுக்கு தனி வீடுகள் இல்லையென்பதால் பலன்கள் இல்லையென்று பொருளில்லை! 11- ம் இடத்தில் சனியும் இவர்கள் நின்றால் தரகு,
வெளிநாடு, ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி புத்தகங்கள், வெப்பம், பிரதிமை எடுப்பது, வழிகாட்டுவது தொடர்பான தொழில்கள் வரவு கூடும்.
பொதுவில் சுபர் வீட்டில் ( குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன்) சனி நின்றால் படிபடியான வளர்ச்சியும், அசுபர் வீடுகளில் ( சனி, செவ்வாய், சூரியன், தேற்பிறை சந்திரன்) நிற்கும் சனி விபரீத ராஜயோக பலன்களையும் கொடுப்பார்.

அதே நேரத்தில் 11- இல் உச்சம் அல்லது நீச்சமான நிலையிருந்தாலும் கண்டிப்பாக வக்கிரம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் வக்கிரம் அடையாத சனி, உச்சமே பெற்றிருந்தாலும் தரித்திரத்தை உண்டு செய்து நிலைகுலைய செய்துவிடுவார் என்பதால்தான்!

பொதுவில் 11 இல் சனி வாரி வழங்கும் வள்ளலே!
அன்னதானம் செய்பவர்களுக்கு துன்ப நேரத்திலும் கருணை காட்டுபவர், அள்ளிதரும் பதினொன்றில் இருந்தால் அளந்தா கொடுப்பார்? அளவின்றி அல்லவா கொடுப்பார்! குப்பை மேட்டிலிருப்பவரையும் குபேரனாக்கும் சக்தி படைத்தது 11 – மிடத்து சனியென்றால் அது மிகையல்ல.

ஏழரையில் (12,1,2 மிடங்கள்) துவங்கி அர்த்தாஷ்டம சனிக்கு வந்து ‘ கண்டசனி மற்றும் அஷ்டம சனியையும் முடித்து நிறையாக 11- மிடத்து சனியின்
சிறப்போடு அவரைப்பற்றிய கட்டுரை நிறைவு செய்தாகி விட்டது.

இதில் குறிப்பாக ‘ சனி அள்ளிக் கொடுப்பதில் அன்னையை போன்றவர். தண்டனை வழங்குவதில் அரக்கனைப்போன்றவர் என்பதனையே நாம் மனதினில் இருத்த வேண்டும். எல்லாம் சரி, சனி கொடுக்கும் விதியை தாங்கியே வாழ்வு அமைகிறது! ஆனால் அவர் கொடுக்கும் ஊழ் விதியை மாற்றும் வழியே கிடையாதா என்றால், `உண்டு’ என்பேன். ‘என்ன வழி’ என்று கேட்டால் அது இறைவன் கொடுத்த வரமான ‘குரு’வே அந்த வழியென்பேன்.

‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்று வரிசைப்படுத்தி சொல்லும் வழக்கம் நம்மிடம் உண்டு. ஆனால் நீங்கள் உங்கள் ஊழ் வினையினை மாற்ற வேண்டுமெனில் இந்த
வரிசையை புரட்டிபோட வேண்டும்.!

இப்போது பாருங்கள். ‘ தெய்வம், குரு, பிதா, மாதா’ நம் ஊழ்வினையைப் போக்கும் சக்தி இறைவன் ஒருவனுக்கே இருக்கிறது! அவருக்கு அணுக்கமாக
இருக்கும் குருவே, நமக்கான தெய்வத்தின் கருணையைப் பெற்றுத்தரமுடியும்!

இந்த குருவும், நவகிரகங்களில் உள்ள குருவும் ஒன்றா? என்று நீங்கள் எழுப்பும் கேள்வியும் என் செவிகளில் விழுகிறது! அது பற்றியும் குரு நின்றவீடுகளுக்கான பலன்களை இனி தொடர்ந்து பார்ப்போம்..

கருத்து தெரிவிக்க