உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ரணிலுக்கு 7 நாட்கள் கெடு! எச்சரிக்கை ‘ஓலை’யும் அனுப்பிவைப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதற்காக கட்சியின் செயற்குழுவையும், நாடாளுமன்றக்குழுவையும் ஒரேநேரத்தில் கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (19) எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன்கூடிய மேற்படி கோரிக்கை கடிதத்தை கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசீமும், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இணைந்து அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளித்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,

” கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரம் மேற்படி கடிதம் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. இது விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் எங்களிடம் தெரிவித்தார்.

கட்சியின் செயற்குழுவையும், நாடாளுமன்றக்குழுவையும் ஒரேநேரத்தில் கூட்டி, கூட்டாக வாக்கெடுப்பு நடத்துவதன்மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும் என நம்புகின்றோம். எனவே, விரைவில் மக்கள் எதிர்பார்க்கும் வேட்பாளரை கட்சி அறிவிக்கும்.” என்றார்.

மாற்று நடவடிக்கையில் இறங்குவோம் 

அதேவேளை, ” இன்னும் 7 நாட்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடவேண்டும். உரிய வகையில் தேர்வு இடம்பெறவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்.” சஜித் ஆதரவு அணி உறுப்பினரான அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க