உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

‘வாழ்வாதார உதவித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும்’

மாற்றுத்திறனாளி மற்றும் மாணவர்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை ஒளி அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் முருகவேல் சதாசிவம் தெரிவித்தார்.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் உதவிகள் பெறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டம், முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்தல் திட்டங்கள், குடிநீர் திட்டங்கள் என்பவற்றை செய்து கொண்டு வந்தோம்.

கடந்த மூன்று மாத காலமாக சில நிர்வாகப் பிரச்சனைகள் காரணமாக தடைப்பட்டிருந்தது. இதனை தற்போது நாம் சீர் செய்துள்ளோம். மக்கள் மீண்டும் எமது உதவிகளை எதிர்பார்ப்பதாக எம்மிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மக்களின் கோரிக்கைக்கு இணங்க நாங்கள் மக்களுக்காக எமது சமூக சேவைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

கடந்த முப்பது வருடங்கள் யுத்த வடுக்களை சுமந்து கொண்டும், இன்றும் அதிலிருந்து மீளாத் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் எமது உறவுகளுக்கு அற்ப உதவிகள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கீழ் மனப்பான்மை கொண்டவர்கள் எமது உறவுகள் உதவிகளை பெற்று ஜீவனோபாயத்தை முன்னேற்றுவதை குழப்பாமல் இருக்க வேண்டும்.

லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பிற்கு எமது தாயகத்தில் இருந்து முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டார்கள் ஆதரவாக இருப்போம். எனவே அரசியல் குறுகிய நோக்கங்களுக்காக எமது மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை குழப்ப வேண்டாம்.

நம்பிக்கை ஒளி அமைப்பு புலம்பெயர் மக்களின் அதரவுடன்; மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தினால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும், வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நம்பிக்கை ஒளி அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஒளியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க