உள்நாட்டு செய்திகள்

‘கோட்டாபய எமக்கு சவால் அல்ல’ – பிரதமர்

“ஜனாதிபதித் தேர்தலில் ஆயிரம் கோட்டாபயக்கள் போட்டியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே வெல்லுவார். இது உறுதி.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவே களமிறங்குவார் என முன்னணியின் புதிய தலைவரான மஹிந்த ராஜபக்ச நேற்று அறிவித்துள்ளார். இது தொடர்பில் பிரதமர் ரணில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று எமது கட்சியின் மத்திய செயற்குழு விரைவில் தீர்மானிக்கும்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ச எமது கட்சிக்கு சவால் அல்ல. அவரின் உண்மை முகத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடையில் என்னதான் ஆட்டம் போட்டாலும் கோட்டாபய ராஜபக்சவால் வெல்வது கடினம். ஆயிரம் கோட்டாபயக்கள் போட்டியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே தேர்தலில் வெல்லுவார். இது உறுதி.

சர்வதேசத்தின் மட்டத்தில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியவர்கள் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றார்கள். இவர்களுக்கு நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளினால் பாடம் புகட்டுவார்கள்” – என்றார்.

கருத்து தெரிவிக்க