உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்’ – இன்று மாலை முதல் ‘வழிபாட்டு’ அரசியல்!

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும்  தமது தரப்புபு வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று மாலை சுபநேரத்தில் அறிவிக்கவுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ச அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இதையடுத்து. பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை அவர் அறிவிக்கவுள்ளார். இந்த அறிவிப்பு 5 மணிக்கு பின்னரே சுபநேரத்தில் வெளியாகும்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்  செயலர் கோட்டாபய  ராஜபக்சவையே, ஜனாதிபதி  வேட்பாளராக, மஹிந்த  அறிவிக்கவுள்ளார்.

இன்றைய மாநாட்டில் கூட்டு எதிரணியின் தலைவர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி  வேட்பாளரை மஹிந்த ராஜபக்ச அறிவித்த பின்னர், கட்சித் தலைவர்கள் இன்று மாலை களனி ரஜமகா விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

நாளை மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடவுள்ளவரும் இணைந்து அனுராதபுர ருவன்வெலிசெயவில் நடைபெறும் 1500 பிக்குகள் பங்கேற்கும் பிரித் ஓதும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க