உள்நாட்டு செய்திகள்புதியவை

‘காத்தான்குடி காவல் அதிகாரியை குற்றம் சுமத்தும் அமைச்சர் ருவான்’

காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி சரியாக செயற்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களை கண்டறியும் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பில் விஷேட நடைமுறைகள் உண்டு. புலனாய்வு பிரிவு வழங்கும் தகவல்களை ஆய்வுசெய்வதற்கு தனியான ஆய்வு பிரிவொன்று செயற்படுகின்றது. இதன் மூலம் நாட்டின் பிரதமருக்கு தகவல் வழங்கப்படும்.

ஏனைய பல நாடுகளிலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைகள் இருப்பதாக நான் அறிந்துள்ளேன் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இவர் கூறிய கருத்து
தொடர்பில் கேட்ட பொழுது,

தாக்குதல் தொடர்பாக நிஷாப் என்பவர் தனது மனைவியுடன் நடத்திய உரையாடலை அடிப்படையாக்கொண்டு புலனாய்வு பிரிவின் தகவலுக்கு அமைவாகவே இவ்வாறான கூற்றை தெரிவித்திருந்தேன் என்றும் அவர் கூறினார்.

மாவநெல்லை சம்பவத்தை சரியாக விசாரித்திருந்தால் உயிர்த்த ஞாயிறு சம்பவ தாக்குதலை தடுத்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க