உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிரித்தானிய கழிவுப்பொருட்களை மீள அனுப்புவதில் சிக்கல்

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்களை அந்த நாடு மீண்டும் திருப்பியெடுத்துக் கொள்ளவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கைக்கு அனுப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட கொள்கலன்களிலான கழிவுப்பொருட்களை பிரித்தானிய திருப்பி தமது நாட்டுக்குள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இந்த பொருட்களை திருப்பி எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எந்த கோரிக்கையும் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தமக்கு கிடைக்கவில்லை என்று பிரித்தானியாவின் சுற்றாடல் துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த பொருட்களை இறக்குமதி செய்த தனியார் நிறுவனமே அவற்றை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பவேண்டும் என்று இலங்கை சுங்கத்திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலைத்தேய நாடுகள் தொடர்ந்தும் ஆசிய நாடுகளுக்கு மீள்சுழற்சி என்ற அடிப்படையில் தமது கழிவுப்பொருட்களை கொண்டு சேர்கின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கனடாவின் கழிவுப்பொருட்களை ஏற்றுக்கொள்ள கம்போடியா மறுப்பு தெரிவித்திருந்தது
அதேபோன்று இந்தோனியாவும் மலேசியாவும் தமது மறுப்பை வெளியிட்டிருந்தன.

இந்தநிலையில் குறித்த பொருட்கள் பிரித்தானியாவில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தால் அவற்றை, திருப்பிஎடுத்துக்கொள்ளுமாறு அந்த அரசாங்கத்திடம் கோரமுடியும்.

எனினும் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் ஏற்றுமதியாளரே இதற்கான கோரிக்கையை விடுக்கவேண்டும் என்று சட்டவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்து தெரிவிக்க