நேர்காணல்கள்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிப்பது பெருமை! – ஜீவா பேட்டி

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் திறமை வாய்ந்தவர் என்ற பெயர் பெற்ற ஜீவா, ‘சங்கிலி புங்கிலி’, ‘கலகலப்பு 2’என்று தொடர்ந்து ஹிட் கொடுத்த நிலையில், தற்போது பாலிவுட்டிலும் கால் பதிக்கிறார். 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவாகும் ‘1983 வேல்ட் கப்’ படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார்.

தனது முதல் பாலிவுட் படமே மிக பிரம்மாண்ட படமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சியில் இருக்கும் ஜீவாவை சமீபத்தில் சந்தித்து பேசிய போது…

இந்த 2019 உங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும் அல்லவா..

நிச்சயமாக…2018 லேயே எனக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டது. சங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு 2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. அதற்கு பிறகு நிறைய  கதைகள் கேட்டேன், அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன். இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90 வது படமாக  SGF 90 படத்தில் நானும் அருள் நிதியும் சேர்ந்து நடிக்க சூட்டிங் விறுவிறுப்பா போயிட்டிருக்கு, டைட்டில் கூடிய சீக்கிரம் சொல்வோம். ஜாலியான படமா இருக்கும்..

மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கீங்க…எப்படி செலக்ட் செய்றீங்க…

முதல்ல கதை, அதற்கப்புறம் கேரக்டர், இரண்டும் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்வேன். நல்ல டீம் அமைஞ்சா நடிக்க  தயாராயிடுவேன். அப்படி நடிச்சி ஹிட்டான படம் தான் ’கலகலப்பு 2’.

முதல் முதலா ஹிந்தி படத்துல நடிக்கிறீங்க…அது பற்றி சொல்ல முடியுமா…

நிச்சயமா, ‘1983 வேர்ல்ட் கப்’ என்ற படத்துல நடிக்கிறேன். ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி. பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ, அது மாதிரி இந்த படமும் இருக்கும். 100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்.

நான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன். நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன், ஜெயிச்சிருக்கேன், அப்படிப்பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்.

1983 ல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம்.

கிட்டத்த 100 நாள் லண்டன்ல ஷுட்டிங், அதுக்கு இப்பவே தயாராயிட்டு இருக்கோம். அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார். அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமை தானே…தமிழ்நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக்கிட்டா நாலு பேர் தானே, அந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம் தானே.

மே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது. மிகப் பிரபலமான பெளலரான சந்து வீட்டுக்கே வந்து கோச் கொடுத்துட்டு இருக்கார். இப்பவே அந்த படத்துக்கு தயாராயிட்டு இருக்கோம்.

லகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கு.

இனிமே யானை மாதிரி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியற மாதிரி இருக்கும். 2019 எனக்கு மட்டுமில்ல, .சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும்னு நிறைய நம்பிக்கை இருக்கு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், சினிமாவுக்கு நல்ல வழி கிடைக்க வேண்டும். அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துகள். உழவு தொழில் சிறக்கட்டும், உயரிய நிலை அடையட்டும்.

என்று உற்சாகமாக கூறிவிட்டு விடைபெற்றார் ஜீவா.

கருத்து தெரிவிக்க