உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் இன்று

போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் இன்றாகும்.

இதன் பிரதான மாநாடு இன்று  கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

ஜூன் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களை இலக்காகக்கொண்டு நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், நடைபவனிகள், கருத்தரங்குகள், சித்திர மற்றும் சுவரொட்டி போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணி, தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபை மற்றும் இலங்கை பொலிஸ் இணைந்து போதைப்பொருள் பாவனை பரவலடைவது குறித்து தேசிய ரீதியான ஆய்வறிக்கையொன்றை தயாரித்துள்ளதுடன், அவ்வறிக்கை மாநாட்டில்  கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அவர்களின் நேரடி தலையீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு முதல் 2019 வரையான காலப்பகுதியில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 14 மாவட்ட மாநாடுகள் நடைபெற்றுள்ளன. மாவட்ட, பிரதேச, கிராமிய மட்டத்தில் 15,000 போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் தற்போது வெற்றிகரமாக நாட்டில் செயற்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் 72,000 போதைப்பொருள் ஒழிப்பு தொழிநுட்ப உதவியாளர்களை கொண்ட அணியொன்று போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றிய மக்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக 1,695 கிலோகிராம் சட்டவிரோத போதைப்பொருட்கள் பகிரங்கமாக அழிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை கைப்பற்றப்பட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களின் அளவு 24,818 கிலோ 393 கிராம் 767 மில்லிகிராம் ஆகும்.

கருத்து தெரிவிக்க