உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

மஹிந்தவும் அவரின் சகாக்களும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்

மஹிந்தானந்த அளுத்கமகேயும், அவரின் சகாக்களும் இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி 50 ரூபா சம்பள உயர்வைக்கூட பெற்றுக்கொடுக்கவில்லை என்று மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக 50 ரூபா கொடுப்பனவை நிலுவைத் தொகையுடன் வழங்குமாறு நாம் அழுத்தம் கொடுத்தோம்.

இதற்கமைய அந்த சலுகை விரைவில் மக்களை சென்றடையும் என்பது உறுதி.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் எல்லாவற்றுக்கும் பலியாடுகள்போல் தலையாட்டவில்லை. உள்ளே இருந்து போராடியவாறே உரிமைகளை வென்றெடுத்து வருகின்றோம்.

தனிவீட்டுத் திட்டம், காணி உரிமை, அதிகார சபை, பிரதேச சபை சட்டத்தில் திருத்தம், பிரதேச செயலகம் உருவாக்கம் என குறுகிய காலப்பகுதிக்குள் உரிமை அரசியலுடன் தொடர்புடைய விடயங்களை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டோம்.

மஹிந்த ஆட்சிகாலத்தில் தொழிலாளர்களிடம் சந்தா வாங்கிக்கொண்ட மஹிந்தானந்த அளுத்கமகே என்ன செய்தார்? 10 வருடங்கள் மஹிந்தவின் ஆட்சி நீடித்தது. தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் இந்நேரம் ஆயிரத்தையும் தாண்டி சம்பளத்தை பெறக்கூடியதாக இருந்திருக்கும்.

எமது மக்களுக்கு எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் என்பது எமக்கு தெளிவாக புரியும். பாடம் எடுக்கும் அரசியலை மஹிந்தானந்த கைவிடவேண்டும் என  கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க