உள்நாட்டு செய்திகள்புதியவை

தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு இன, மத சாயம் பூசப்படுகிறது: மனோ கணேசன்

தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தனக்கு விளங்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரும் போராட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உப பிரதேச செயலகத்தையே முழு பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது பிழை என்றால் கிழக்கில் காணப்படும் இன ரீதியான பிரதேச செயலகங்களை, கல்வி வலயங்களை கலைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசம் தனியொரு பிரதேச செயலகமாக ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. அதனை கல்முனை மாநகர சபையில் இருந்து முற்றாக பிரித்தெடுத்து நகரசபையாக்குமாறு கோரி, முஸ்லிம் மக்கள் தற்போது போராடி வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஒரே இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள், கல்முனை மாநகர சபையில் இருந்து முற்றாகப் பிரிந்து, தனி நகர சபை வேண்டும் என போராடும் போது, சகோதர இனத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது என அமைச்சர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்து தெரிவிக்க